கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்தவித பரிசுத் திட்டங்களையும், வணிக நிறுவனங்கள் விளம்பரம் செய்யக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சில வணிக நிறுவனங்கள், பண்டிகை காலங்களில் தங்களின் சுயலாபத்துக்காக பரிசு குலுக்கல் என்ற திட்டத்தின் மூலம் விலையை கூட்டியும், தரமற்ற பொருள்களை விற்பனை செய்தும், அளவைக் குறைத்தும், கலப்பட பொருள்கள், பழைய இருப்பு பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் மக்களை ஏமாற்றி வருவதாக தெரிய வருகிறது. இதுபோன்ற ஏமாற்று வேலைகள் ஜவுளிக்கடை, பெட்ரோல் விற்பனை நிலையம், ரியல் எஸ்டேட், இனிப்புக் கடைகள், பட்டாசு கடைகள் போன்ற நிறுவனங்களில் நடைபெறுகிறது என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், ஆடி மாத சிறப்பு குலுக்கல், ரம்ஜான் பண்டிகை, தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, போன்ற பண்டிகை தினங்களை முன்னிட்டு, சிறப்பு பரிசுக் குலுக்கல் திட்டங்களை நடத்த அரசு தடை விதித்துள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தவகையான பரிசுத் திட்டங்களை எந்தவித வணிக நிறுவனங்களும் விளம்பரப்படுத்தக் கூடாது. அவ்வாறு, எந்த நிறுவனங்களாவது தடையை மீறி விளம்பரப்படுத்தியது தெரியவந்தால், தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள்(தடை) சட்டம் 1979 - இன் கீழ் காவல் துறையினரால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.