கிருஷ்ணகிரி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: முஸ்லிம் சமூகத்தினரைச் சேர்ந்த, கணவரால் கைவிடப்பட்ட, வயதான பெண்களுக்கு உதவும் வகையில், அவர்கள் சுயதொழில் தொடங்கிடும் வகையில், சிறுதொழில் செய்ய பயிற்சியளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட முஸ்லிம் உதவும் சங்கம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டு வருகிறது. அரசு ஆணையின்படி, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கத்தின் உறுப்பினர்களை மாற்றம் செய்யும் வகையில் ஏதுவாக கௌரவச் செயலர், கௌரவ இணைச் செயலர், உறுப்பினர் என 6 முஸ்லிம் சமூகத்தினர் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதிகள்: விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். சமூக பணியில் ஆர்வத்துடன் செயல்படுபவராகவும், எவ்வித புகாரும், குற்றவியல் நடவடிக்கையோ அல்லது நீதிமன்ற குற்றவியல் வழக்குகளோ நிலுவையில் இருக்கக் கூடாது. தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக தேர்வு செய்யப்படுவர். அந்த சங்கத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள், தங்களது சுய விவரத்துடன் விண்ணப்பத்தை ஜன. 21-ஆம் தேதிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.