ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மக்கள் தொகை தின உறுதிமொழியேற்பு மற்றும் பெண்களுக்கு செல்லிடப்பேசியால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் ஜெ.மே.ஷோபா, முதல்வர் ப.உமாமகேஸ்வரி, அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மரம் நடுவோம் என உறுதிமொழியேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து மக்கள் தின கருத்துக்கள் அடங்கிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து, சாமல்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மிதுன்குமார் செல்லிடப்பேசியால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், செல்லிடப்பேசி செயலியால் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்தும், தலைக்கவசம் அணியவேண்டும் என்றும் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். இதில் கல்லூரியில் பயிலும் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மாணவியர் மற்றும் பேராசிரியர்கள், காவல் துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர். தமிழ்த் துறைத் தலைவர் பா.தமிழரசி நன்றி கூறினார்.