ஆவினுக்கு நிலுவைத் தொகை ரூ.2.31 கோடியை வழங்க மறுக்கும் கோவை பால் நிறுவன மேலாளர்கள் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம், கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தில் கோவை மாவட்டம், அவினாசி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பால் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.3.31 கோடிக்கு பால் மற்றும் பால் பொருள்களை கொள்முதல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, கொள்முதல் செய்த தொகைக்கு ரூ.1 கோடி மட்டுமே அந்த நிறுவனம் திருப்பிச் செலுத்தியதாம். மீதித் தொகையைச் செலுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் ஒன்றியத்தின் பொது மேலாளர் ஜெயசந்திரன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், கோவை தனியார் பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் செல்வகுமார், சுமதி, பொது மேலாளர் வேலவன் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.