வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.250, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, இளநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600 என மூன்றாண்டு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்த மாற்றுத் திறனாளி பதிவாளர்களுக்கு முறையே ரூ.600, ரூ.700, ரூ.1,000 வீதம் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது. (கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் உதவித்தொகை பெற்றிருந்தால் பதிவுதாரர்கள் இந்த அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை பெறக் கூடாது).
இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பொதுப் பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர்களை பொறுத்தவரை 31.12.2018-க்குள் மேற்கண்ட கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலமும், 31.3.2019-ஆம் தேதியின் நிலவரப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்தமட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருவாய் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவித நிதி உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. இந்த நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது.
மேற்கண்ட தகுதியுடையவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் தொடர்பு கொள்ளலாம். 
மேலும், ஏற்கெனவே உதவித்தொகை பெறும் பயனாளிகளில் ஓராண்டு முடிவுற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித்தொகை 12 காலாண்டுகள் வழங்கப்படும். இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்களுக்கு மீதமுள்ள காலாண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படாது. 
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, வேலைவாய்ப்பகத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான ஒப்புகைச் சீட்டு, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கிப் புத்தகத்தில் மைக்ரோகோட், கிளை எண் முத்திரையிட்ட நகலை சமர்ப்பித்து இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com