ஊத்தங்கரை ஒன்றியத்தில் அம்மா சிமெண்ட் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
ஊத்தங்கரை ஒன்றியம் ஒரு பேரூராட்சி மற்றும் 34 ஊராட்சிகளைக் கொண்டது. இங்கு அனைத்துக்கும் அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தனி நபர்கள் வீடுகளும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந் நிலையில் கட்டுமானப் பணிக்காக அரசு வழங்கும் அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து வைத்துள்ளனர். கடந்த ஒருவருட காலமாக 150 பேருக்கு மட்டுமே அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 150 பேருக்கு சிமெண்ட் வழங்காமல் காலம் கடத்தி வருகின்றனர். மூன்று மாதத்துக்கு ஒருமுறை சிமெண்ட் வருவதாகக் கூறுகின்றனர்.
ஒரு பயனாளி கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அம்மா சிமெண்ட் வழங்கக் கோரி பதிவு செய்தவர்களுக்கு இதுவரை சிமெண்ட் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு சிமெண்ட் வழங்க மேலும் 6 மாதங்கள் ஆகலாம். இதனால், பணியைத் துவக்கிவிட்டு அம்மா சிமெண்ட் எப்போது கிடைக்கும் என பயனாளிகள் காத்துள்ளனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் ராம்கோ சிமெண்ட் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது அவர்கள் எப்போது எங்களுக்கு அனுப்பி வைக்கின்றார்களோ? அப்போது நாங்கள் வழங்குகிறோம் எனக் கூறுகின்றனர்.
பதிவு செய்த நபர்களுக்கு உடனடியாக அம்மா சிமெண்ட் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.