கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ. 12.50 லட்சம் மதிப்பிலான அளவீடு கருவிகள் பெறப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராமப்புற சாலை மற்றும் ஏரிக்கரைகளை சரி செய்ய அளவீடு கருவி (டோடல் ஸ்டேசன்) கொண்டு பொறியாளர்கள் துள்ளியமாக அளவீடு செய்கின்றனர்.
இதற்காக ஒவ்வொரு முறையும், அண்டை மாவட்டங்களில் இருந்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு, இந்த அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனால், இந்தத் துறைக்கு பண செலவுடன் பொறியாளர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில், தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு என ரூ. 12.50 லட்சம் மதிப்பில் இரண்டு அளவீடு கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்தக் கருவி மூலம் அளவீடு செய்ய அனைத்துத் துறையை சேர்ந்த பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்களுக்கு பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக பயிற்சி அளிக்கப்பட்டன.
இந்தப் பயிற்சியைத் திட்ட இயக்குநர் லோகேஸ்வரி தலைமையில், ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர்கள் ஆறுமுகம், சரவணன் ஆகியோர் அளித்தனர். இதில் 10 பொறியாளர்கள், 10 சாலை ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.