கிருஷ்ணகிரியில் சாலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி முற்றிலும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கிருஷ்ணகிரி நகரில், போக்குவரத்து அதிகம் உள்ள வட்டச் சாலை முதல் லண்டன் பேட்டை பி.எஸ்.என்.எல் வட்டச் சாலை வரையில் சாலையில் ஆக்கிரமிப்புகள் செய்து கடைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. மேலும், மழை பெய்யும்போது, மழைநீர், தேங்கி சாலையை சேதப்படுத்தும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சாலையை ஆக்கிரமித்து கடைகளை அகற்றும்படி, கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த உதவி கோட்டப் பொறியாளர் கவிதா தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஊழியர்கள் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்தப் பணியில் ஆக்கிரமித்துள்ள கடைகள் அகற்றப்பட்டன. கிருஷ்ணகிரி நகரில், கே தியேட்டர் சாலையில் பெயரளவிலேயே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பெரும்பாலும் அங்குள்ள பெரிய நிறுவனங்கள், சாலைகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், அவற்றை அகற்றாதது, அரசுத் துறை அலுவலர்கள், ஒரு பிரிவினருக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. எனவே, பாரபட்சமின்றி, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.