ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

விழிப்புணர்வு நடவடிக்கையால் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 69 பேர் சேர்ந்துள்ளனர்.

விழிப்புணர்வு நடவடிக்கையால் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 69 பேர் சேர்ந்துள்ளனர்.
போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் ஒன்றியம், கோட்டூரை சுற்றி பல கிராமங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தனர். பல்வேறு காரணங்களால் அங்குள்ள அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை சரிந்து வந்தது. 2013-2014-ஆம் ஆண்டு கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 52 குழந்தைகள் மட்டுமே படித்து வந்தனர்.
இந்நிலையில், அப்பள்ளியில் பணிபுரியும்  தலைமை ஆசிரியர் மவுளசுந்தரி, ஆசிரியர்கள் சர்ஜான், சத்தியகுமார், லட்சுமி, அருள் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியால் நிகழாண்டில் மாணவ, மாணவியரை பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியது: நாங்கள் சுற்று வட்டார கிராமங்களில் வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் அரசுப் பள்ளியில் தரமான கல்வி அளிப்பதாக உறுதியளித்தோம். அதன் பயனாக பள்ளி திறக்கப்பட்ட பின் 69 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர்.
மேலும் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கவும், கல்வித்தரம் மேம்படுத்தவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என
தெரிவித்தனர்.
கடந்த 2015-2016-இல் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு காமராஜர் விருது வழங்கப்பட்டது. மேலும், இப்பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் பணியாற்றி வருவதற்காக அரசு பல்வேறு விருதுகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com