ஒசூர் மாநகராட்சியில் குடிநீர் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: ஒசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. அதில் ஒரு சில வார்டுகளில் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல வார்டுகளில் குடிநீர் இன்றி மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் விநியோகம் செய்ய குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன. ஆனால் குடிநீர் விநியோகம் தொடங்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், அலுவலர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் சிரமம் அடைந்து வருகின்றனர். மாநகராட்சி முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, விரைவில் கிருஷ்ணகிரி (மே) மாவட்டச் செயலர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. அனுமதியுடன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அந்த அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.