கிருஷ்ணகிரி நகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும், கொசுப் புழுக்கள் அழித்தல் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசுப் புழுக்கள் அழித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகராட்சிக்கு உள்பட்ட பூந்தோட்டம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை, மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் ஆய்வு செய்தார். அப்போது, அவர் தெரிவித்தது: கிருஷ்ணகிரி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசுப் புழுக்கள் அழித்தல் பணியில் 56 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள 23 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு 60 நாள்களில் இடைவெளி விட்டு நிலவேம்பு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று நீர் சேமிப்புத் தொட்டிகளில் அபேட் மருந்துத் தெளிக்கப்படும் என்றார்.
அப்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரியா ராஜ், நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ், சுகாதார ஆய்வாளர் மோகன சுந்தரம், மலேரியா தடுப்பு அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.