உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.94 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, பென்னாகரம் அருகேயுள்ள நாகதாசம் பட்டியில் பறக்கும் படை அதிகாரி வில்சன் தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நேரத்தில் தருமபுரியை நோக்கிச் சென்ற காரை சோதனையிட்டனர். அப்போது காரில் பென்னாகரம் அருகேயுள்ள நல்லாம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன்அருள்மணி(40) என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.3.94 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில் ஏலச் சீட்டு கட்டுவதற்காக பணம் எடுத்து செல்வதாக அருள்மணி தெரிவித்தார். இருப்பினும், பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பென்னாகரம் வட்டாட்சியர் சதாசிவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முறையான ஆவணங்களைக் காட்டி பணத்தை பெற்றுச் செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.