தேன்கனிக்கோட்டையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

தேன்கனிக்கோட்டையில் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்தை தேர்தல் அலுவலர்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். 

தேன்கனிக்கோட்டையில் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்தை தேர்தல் அலுவலர்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். 
தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, தேன்கனிக்கோட்டை-தளி சாலையில் தேர்தல் அலுவலர்கள் வாகனச் சோதனை நடத்தி வந்தனர்.  அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம்,  உலிவீரணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அப்பைய்யா மகன் முனிராஜ்,  தனது காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1,07,750-ஐ எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து,  சோதனையில் ஈடுபட்ட நில கண்காணிப்புக் குழு அலுவலர் குமார்,  தளி வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் முரளி ஆகியோர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்தனர்.  உதவி தேர்தல் அலுவலர் முத்துபாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  அதையடுத்து,  உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி தேர்தல் அலுவலர்கள் அவரிடம் தெரிவித்தனர். 
அரூரில்  ரூ.73 ஆயிரம் பறிமுதல்:
தருமபுரி மக்களவைத் தொகுதி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் காரணமாக தருமபுரி-திருப்பத்தூர் சாலை இருமத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தைச் சோதனை செய்ததில்,  தருமபுரி மாவட்டம், சித்தன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சம்பத் மகன் கணேசன் (30), உரிய ஆவணம் இன்றி ரூ.73, 900 எடுத்துச் செல்வது தெரியவந்தது.  இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்,  அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com