ஒசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக அரசியல் கட்சியினர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒசூர் சிப்காட் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வடிவேல், மூக்காண்டப்பள்ளி மேம்பாலம் அருகே கண்காணிப்பு பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு திமுகவினரின் சுவர் விளம்பரம் வரையப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, ஒசூர் சின்ன எலசகிரியைச் சேர்ந்த சுரேஷ்(35) மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல், ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் அதிமுகவினர் சுவர் விளம்பரம் செய்தது தொடர்பாக வாசுதேவன் மீது அட்கோ போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். ஒசூர் ராயக்கோட்டை மேம்பாலத்தில் சுவர் விளம்பரம் செய்த திமுக நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்தியா மீது அட்கோ போலீஸாரும், சூளகிரியில் மேம்பாலத்தில் சுவர் விளம்பரம் செய்தது தொடர்பாக அதிமுக ஒன்றியச் செயலாளர் சம்பங்கி மீது சூளகிரி போலீஸாரும் வழக்குப் பதிந்துள்ளனர்.
கல்லாவில் பதாகை வைத்தது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெங்கடேசன்(37), வீரமணி(42) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.