பாப்பாரப்பட்டியில் பயன்பாடற்ற சுகாதார நிலையத்தைசுப்பிரமணிய சிவா புகைப்பட காட்சியகமாக மாற்ற வலியுறுத்தல்
பாப்பாரப்பட்டியில் பயன்பாடின்றி சிதிலமடைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பித்து சுப்பிரமணிய சிவா நினைவு புகைப்பட காட்சியகமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் 1996-இல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதைத் தொடர்ந்து அப்பகுதியில் சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது.இந்த நிலையில், சுகாதார வளாகம் போதிய இட வசதி இல்லை எனக் கூறி, பழைய பாப்பாரப்பட்டி பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், புதர்கள் அடர்ந்து பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் இந்த சுகாதார நிலையத்தை புதுப்பித்து தியாகி சுப்பிரமணிய சிவாவின் புகைப்படங்கள் மற்றும் முழுமையான வாழ்க்கை குறிப்புகள் அடங்கும் வகையில் நூலகத்துடன் கூடிய புகைப்பட காட்சியகமாக மாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜேந்திரன் கூறியது: பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பயன்பாடின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த இடத்தை சுகாதாரத் துறையிடம் இருந்து அரசு திரும்பப் பெற்று, புதுப்பித்து தியாகி சுப்பிரமணிய சிவாவை நினைவு கூறும் வகையில் அவரின் வரலாற்று குறிப்புகள், புகைப்படங்கள்,சுதந்திர போராட்டத்தில் அவரின் பங்குகள் அடங்கிய குறிப்புகள், அவர் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தும் காட்சியகமாக மாற்ற வேண்டும் என்றார்.