மக்களவைத் தேர்தலில் போலீஸார் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி காவல் உள்கோட்ட எல்லையில் உள்ள போலீஸார், தேர்தலின் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கிருஷ்ணகிரி சரக துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில், கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேர்தலின் போது, தீவிர வாகன தணிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். சுவர் விளம்பரம், வாகனங்களில் கட்டப்படும் அரசியல் கட்சி கொடிகளையும் கண்காணிக்க வேண்டும்.
வேட்பாளர் பயணிக்கும் வாகனத்தில் 4 பேருக்கு மேல் பயணம் செய்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
வாக்குச்சாவடி மையங்களில் வாக்குகள் பதிவான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்க அனுப்பிவைக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் தொடர் பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி, மகாராஜகடை, காவேரிப்பட்டணம் ஆகிய காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீஸார் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.