வேப்பனஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. வேப்பனஅள்ளி மற்றும் அண்டை மாநிலங்களில் கடும் வறட்சி நிலவுவதால், வன விலங்குகள் அவ்வப்போது, விளை நிலங்கள், கிராமங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு, குடியிருப்பு, நிலங்களில் நுழையும் வன விலங்களையோ துன்புறுத்தாமல், வனத் துறையினருக்கு பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என ஒலி பெருக்கி மூலமும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் வனத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வேப்பனஅள்ளி வனச் சரகர் நகேஷ் தலைமையில் வனக் காப்பாளர்கள் சம்பத், முருகேசன், இளையராஜா ஆகியோர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.