கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளின் வசதிக்காக கால்நடை மருந்தகங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மரியசுந்தரம், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் பகல் நேரத்தில் அதிகமாக உள்ளது. இதனால், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் மேய்ச்சலுக்கு கால்நடைகளை அழைத்து செல்ல வேண்டாம். தேவைப்பட்டால் நிழல் மிகுந்த பகுதிகளில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கிருஷ்ணகிரி மண்டலத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் நிரந்தரமாகவும், கோடைக் காலத்தில் நிலவும் வறட்சியின் காரணமாக தற்காலிகமாகவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தண்ணீர் தொட்டிகளில், சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளுக்கு குறைவின்றி நீர் நிரப்பப்படுகிறது. எனவே, கால்நடை வளர்ப்போர், சிகிச்சைக்கு அழைத்து வரும் கால்நடைகளுக்கு இந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.