பணியின்போது காவலரைத் தாக்கியதாக கப்பல் படை வீரர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் திருப்பதி (35), திங்கள்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜக்கப்பன் நகரில் சந்தேகப்படும் வகையில் இருவர், மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் சுத்தியல் போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததால், காவலர் திருப்பதி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த இருவரும், திருப்பதியை தாக்கினராம். இதில் காயம் அடைந்த திருப்பதி, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஜக்கப்பன் நகர், 8 - ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த அரவிந்த் குமார் (27), திருமலை நகரைச் சேர்ந்த அன்பழகன்(27) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அரவிந்த் குமார், கேரள மாநிலத்தில் கப்பல் படை வீரராக பணியாற்றி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.