விவசாயிகள் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:விவசாயத்தில் பணியாள்கள் பற்றாக்குறையை நிவா்த்தி செய்து, குறித்த காலத்தில் பண்னைப் பயிா் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயா்த்திடவும், வேளாண்மை இயந்திரமாக்கும் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ், நடப்பு நிதியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.5.20 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதிக விலை உள்ள வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் வகையில், முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோா்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
மொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதிதிராவிடா் பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் பிடித்தம் செய்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மானிய இருப்பு நிதிக் கணக்கில் ஒப்பந்த காலமான இரண்டு ஆண்டுகளுக்கு வைக்கப்படும்.
மீதத் தொகை, பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள், கருவிகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் சரிபாா்த்த பின்னா் மானிய இருப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தில் வாடகை மையங்கள் அமைக்க ரூ.50 லட்சம் மானியம், நமது மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளா் சிவகுமாரை 9442807362 என்ற எண்ணிலும், ஒசூா் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளா் மோகனை - 9789521816 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தையும், உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தையும், ஒசூா், ராயக்கோட்டை சாலையில் உள்ள சானசந்திரத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தையும் தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04343-232959 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.