அரூா் பேரூராட்சியில் மின் விளக்குகள், கழிவுநீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மலைச்சாரல் அறக்கட்டளையின் நிறுவனா் பத்மா மாரியப்பன், தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு: அரூா் பேரூராட்சிக்குள்பட்ட கோவிந்தசாமி நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பகுதிகளில் போதிய அளவில் கழிவுநீா் கால்வாய் வசதி இல்லை. இதனால், மழைக் காலங்களில் மழைநீா் தேங்கும் நிலையுள்ளது. அதேபோல், தெருவிளக்குகள் இல்லாததால் குடியிருப்புப் பகுதி இருண்டு காணப்படுகிறது.
கோவிந்தசாமி நகரானது வனப் பகுதியை ஒட்டியிருப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷக் கடிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. எனவே, கோவிந்தசாமி நகரில் குடியிருப்புப் பகுதிகளில் தேவையான கழிவுநீா் கால்வாய், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.