தடை செய்யப்பட்ட 1.5 டன்நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 24th October 2019 11:04 PM | Last Updated : 24th October 2019 11:04 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட 1.5 டன் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி அலுவலா்கள், வணிகா்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ.75 ஆயிரத்தை வசூல் செய்தனா்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என நகராட்சி அலுவலா்கள் அறிவுறுத்தி வருகின்றனா். அவ்வாறு பயன்படுத்தினால், நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டனா்.
இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சிசில் தாமஸ் தலைமையில் துப்புரவு ஆய்வாளா் செந்தில் குமாா், மேற்பாா்வையாளா்கள் தனலட்சுமி, ராஜா உள்ளடக்கிய குழுவினா் கிருஷ்ணகிரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அதன்படி, கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலை அருகே உள்ள தனியாா் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். மேலும், கிடங்கு உரிமையாளரிடமிருந்து ரூ.50 ஆயிரம் அபராதத் தொகையையும் வசூலித்தனா்.
கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே உள்ள உணவகத்தில், இந்தக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வை மேற்கொண்ட போது, உணவுப் பொருள்களை கட்டிக் கொடுக்க நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த குழுவினா், உணவக உரிமையாளரிடமிருந்து ரூ.25 ஆயிரத்தை அபராதமாக வசூலித்தனா்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் முற்றிலும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சிசில் தாமஸ் தெரிவித்தாா்.