சூளகிரி ஒன்றியம் உள்ளட்டி ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் ஏரி தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் உள்ளட்டி ஊராட்சியில் ஏரி தூர்வாரும் பணி மற்றும் குளம், குட்டைகள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பின் ஆட்சியர் தெரிவித்தது:
சிறப்பு திட்டமான குடிமராமத்து பணிகள் நமது மாவட்டத்தில் மொத்தம் 100 ஏரிகள், 325 குளம், குட்டைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது கூடுதலாக 100 ஏரிகள் தூர்வாரும் பணி மேற்கொள்ள தமிழக முதல்வர் அனுமதி வழங்கியதையடுத்து, 200 ஏரிகள், 325 குளம், குட்டைகள் என மொத்தம் 525 பணிகள் வடகிழக்கு பருவமழைக்கு முன் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சூளகிரி ஒன்றியத்துக்குள்பட்ட இம்மிடிநாயக்கனப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, துப்புகானப்பள்ளி, கானலட்டி, உள்ளட்டி, சாமனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, கொம்மேப்பள்ளி, ஆலூர், அத்திமுகம் ஆகிய 10 ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சத்தில் ஏரி தூர்வாரும் பணிகளும், 34 குளம், குட்டைகளுக்கு தலா ரூ.1 லட்சத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போல உள்ளட்டியில் 9.36 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் ரூ.5 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித் துறை) சிவசங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமசந்திரன், விமல்ரவிகுமார், ஒன்றியப் பொறியாளர்கள் மணிவண்ணன், சுரேஷ், பணி மேற்பார்வையாளர் சிற்றரசு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன், வருவாய் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.