கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், நொடிக்கு 70 ஆயிரம் கன அடியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடகம், கேரளத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரி ஆற்றில் உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மழை குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் வரும் உபரிநீரின் அளவு குறைந்து வந்தது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 65 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்த தண்ணீரின் அளவு, புதன்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 68 ஆயிரம் கன அடியாக அதிகரித்து, தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்து கொண்டிருந்தது.
மேலும், மாலை நிலவரப்படி சற்று அதிகரித்து நொடிக்கு 70 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக நீர்வரத்தானது குறைவதும், அதிகரிப்பதாகவும் உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பிரதான அருவிகள், சினி அருவிகள், நடைபாதை மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன.
குளிக்கத் தடை நீடிப்பு: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 6-ஆவது நாளாகவும், அருவிகளில் குளிக்க தொடர்ந்து 35-ஆவது நாளாகவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்காதவாறு இருக்க நடைபாதை, முதலைப் பண்ணை,ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.