போட்டப்பனூரில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க, கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியர் சு.பிரபாகர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில், போட்டப்பனூரைச் சேர்ந்த கிராம பெண்கள் அளித்த மனுவின் விவரம்: வேப்பனஅள்ளியை அடுத்த சென்னசந்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட பேட்டப்பனூர் கிராமத்தில் 75-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஆவல்நத்தம் கோயிலுக்குச் செல்லும் பிரிவு சாலை அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இந்த டாஸ்மாக் மதுக்கடையில் பணியாற்றிய விற்பனையாளர் ராஜாவைக் கொன்று, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த டாஸ்மாக் மதுக்கடை அப்புறப்படுத்தப்பட்டது.
இத்தகைய நிலையில், அதே இடத்தில் மீண்டும், டாஸ்மாக் மதுக்கடையைத் திறக்க, நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.
அவ்வாறு, மீண்டும் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டால், அந்த வழியாகச் செல்லும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர், விவசாய தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, மீண்டும் டாஸ்மாக் மதுக்கடையைத் திறக்கக் கூடாது என அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.