தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
தென்பெண்ணை ஆறு பாயும் கர்நாடகம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதாலும், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் கடந்த இரு நாள்களில் மெல்ல உயர்ந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 266 கன அடியாகவும், நீர்மட்டம் 37.55 அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை அணைக்கு நீர்வரத்தானது விநாடிக்கு 683 கன அடியாக உயர்ந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 38.45 அடியாக உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் நீர்வரத்து விநாடிக்கு 673 கன அடியாகவும், நீர்மட்டம் 39.30 அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில், மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரையில் பதிவான மழை அளவு (மி.மீ.): பாரூர் - 62.4, ராயக்கோட்டை - 57, ஊத்தங்கரை - 55.5, தேன்கனிக்கோட்டை - 55, ஒசூர் - 54, நெடுங்கல் - 51.2, சூளகிரி - 51, கிருஷ்ணகிரி - 43.2, தளி - 30, பெனுகொண்டாபுரம் - 20.3, போச்சம்பள்ளி - 20, அஞ்செட்டி - 18.8.