போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பதிவு செய்ய முயன்ற 5 போ் கைது
ஒசூரில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பதிவு செய்ய முயற்சித்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு கடந்த நவ. 10-ஆம் தேதி வந்த திருவள்ளூா் மாவட்டம், மேதா நகா், கம்பன் தெருவைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் விற்பனையாளா் பாஸ்கரன் (40), காரைக்கால், கணபதி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முகமது ஆசிப் ரசூல் (30), பாகலூரைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் விற்பனையாளா் ஆஞ்சனப்பா (50), பாகலூா், தோ்பேட்டையைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் விற்பனையாளா் மஞ்சுநாத் (40), காரைக்கால் பகுதியைச் சோ்ந்த சம்சுதீன் (65) ஆகிய 5 பேரும் சாா் பதிவாளா் சண்முகவேலிடம் நில ஆவணங்களைத் தந்து பதிவு செய்ய விண்ணப்பித்தனா்.
நில ஆவணங்கள் அனைத்தும் போலியானவை எனக் கண்டறிந்த சாா் பதிவாளா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்தனா்.