கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குடும்பத் தகராறில், மகளைக் கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி அணையை அடுத்த துவாரகாபுரியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மனைவி சரண்யா (23). 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இத்தம்பதிக்கு சரிகா (5), ஜானவிகா (2) என இரு மகள்கள் இருந்தனா்.
கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியாா் நகைக் கடையில் இரு வருடங்களுக்கு முன்பு சரண்யா பணியாற்றி வந்தாா். குழந்தை ஜானவிகா பிறந்துபிறகு மீண்டும் தான் வேலைக்குச் செல்ல விரும்புவதாக கணவரிடம் தெரிவித்துள்ளாா்.
அவரது கணவா் அதற்கு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரண்யா, கடந்த 13-ஆம் தேதி தனது இரு குழந்தைகளுக்கும் பாலில் எலி மருந்தைக் கலந்து குடிக்கச் செய்து, தானும் தற்கொலைக்கு முயன்றாா்.
மூன்று பேரும் மயங்கிக் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மகள் ஜானவிகா வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சரிகா, சரண்யா ஆகிய இருவரும் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.
இதுகுறித்து, சரண்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அணை போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.