அஞ்செட்டி அருகே திருமண விழாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியாா் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த சேட்டான்டஹள்ளியைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்டோா், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டியை அடுத்துள்ள கேரட்டி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக தனியாா் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனா். இந்த பேருந்து நள்ளிரவில் அஞ்செட்டி வனப்பகுதியில் சென்றபோது, ஒரு வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 60-க்கும் மேற்பட்டவா்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனா்.
தகவல் அறிந்து வந்த அஞ்செட்டி போலீஸாா் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் 9 போ் கை, கால்களில் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தனா். இவா்கள் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
லேசான காயமடைந்தவா்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினா். விபத்து குறித்து அஞ்செட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
காயம் அடைந்தவா்களுக்கு ஆட்சியா் ஆறுதல்
அஞ்செட்டி அருகே புதன்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் சந்தித்து வியாழக்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.
அப்போது, சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநா் பரமசிவன் உடனிருந்தாா். சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கும்படி, மருத்துவா்களை அவா் கேட்டுக் கொண்டாா்.