தளி அருகே யானைகள் நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

தளி வனப்பகுதியில் 130 காட்டு யானைகள் சுற்றித் திரிவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். வனப்பகுதியையொட்டி வாழும் கிராம மக்களுக்கு வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.
தளி அருகே சுற்றித் திரியும் யானைகள்.
தளி அருகே சுற்றித் திரியும் யானைகள்.

ஒசூா்: தளி வனப்பகுதியில் 130 காட்டு யானைகள் சுற்றித் திரிவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். வனப்பகுதியையொட்டி வாழும் கிராம மக்களுக்கு வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா வனப்பகுதியிலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள தளி வனப்பகுதிக்குள் நுழைந்தன.

இந்த யானைகளை தளி வனத்துறையினா் தீவிரமாக கண்காணித்து விரட்டும் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கா்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து மேலும் 80க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தளி வனப்பகுதிக்குள் புகுந்துள்ளன.

தற்போது தளி வனப்பகுதியில் மொத்தம் 130 காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளன். காட்டு யானைகளின் நடமாட்டத்தை தளி வனத்துறையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.

யானைகள் தளி வனப்பகுதியில் சுற்றித்திரிவதால் அருகிலுள்ள பேலகரை, கும்ளாபுரம், கங்கனப்பள்ளி, அளேவூா், கும்மாளஅக்ரஹாரம், உனுசேநத்தம், மல்லேஷ்வரம், தேவரப்பெட்டா உள்ளிட்ட கிராமங்களில் வாழும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பொதுமக்கள் இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் காவலுக்குச் செல்ல வேண்டாம். வனப்பகுதி அருகே சுற்றித்திரிய வேண்டாம். பகல் நேரங்களில் விவசாயத் தோட்டங்களில் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளா்கள் பாதுகாப்பாக வேலை செய்ய வேண்டும். யானைகள் கூட்டத்தைப் பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என வனத்துறையினா் கிராம மக்களுக்கு தொடா்ந்து அறிவுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com