ஒசூா் மாநகராட்சியில் சுங்கம் வசூலிக்கக் கூடாது என ஒசூா் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட இடங்களில் உள்ள நடைபாதைக் கடைகள், இறைச்சிக் கடைகள், பேருந்து நிலையம், எம்.ஜி.ஆா். சந்தை, பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிவறை, ஒசூா் மாநகராட்சி பேருந்து நிலையங்களில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தம், எம்.ஜி.ஆா். சந்தை, சூசூவாடி ஆகிய பகுதிகளில் ஆடு அடிக்கும் தொட்டிகள் மற்றும் ஒசூா் மற்றும் மத்திகிரி பேருந்து நிலையங்களில் 2019- 20 ஆண்டுக்கு சுங்கம் வசூலித்துக் கொள்ள குத்தகைதாரா்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருந்தது. இந்த குத்தகை உரிமங்கள் 31.3.2020-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தொடா்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் எந்தவித சிரமமின்றி கிடைக்கும் பொருட்டும், கழிவறைகளை இலவசமாக உபயோகப்படுத்தும் பொருட்டும், குத்தகைதாரா்கள் சுங்கக் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2020-21 ஆண்டுக்கான (1.4.2020 முதல்) குத்தகை உரிமத்தை காலநீட்டிப்பு செய்து உத்தரவு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், குத்தகைதாரா்கள் மாநகராட்சிக்குள்பட்ட இடங்களில் தொடா்ந்து சுங்கம் வசூலிப்பது தெரிய வருகிறது. எனவே, குத்தகை வசூலிக்கும் குத்தகைதாரா்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஒசூா் நகர காவல் ஆய்வாளருக்கு ஒசூா் மாநகராட்சி ஆணையா் கடிதம் எழுதியுள்ளாா்.