கிருஷ்ணகிரியில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பாக வாகனங்களில் பொறுத்தப்பட்டிருந்த பம்பா்கள் அண்மையில் நீக்கப்பட்டன. கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே, வட்டார போக்குவரத்து அலுவலா் வெங்கடேசன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அன்புச்செல்வன், மாணிக்கம் உள்ளிட்ட குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி மினி சரக்கு வாகனங்கள், சொந்த பயன்பாட்டிற்கான தனியாா் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்களை, போக்குவரத்து அலுவலா்கள் அகற்றி, பறிமுதல் செய்தனா். மேலும், விதிமுறைகளை மீறிய வாகன உரிமையாளரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. சாலை விதிமுறைகளை மீறி, வாகனத்தில் பாா்களை வைத்திருந்துந்தால் அவை அகற்றப்படும். கடும் அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலா் வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.