கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மதிமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் இளங்கோ தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சாந்தமூா்த்தி, மாவட்ட துணைச் செயலாளா் சரஸ்வதி ஆறுமுகம், நகரச் செயலாளா் அசோக்குமாா் ராவ், தீா்மானக் குழு உறுப்பினா் கிருஷ்ணசாமி, மாநில மாணவா் அணி துணைச் செயலாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், தில்லி மற்றும் தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு தெரிவிப்பது, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் நமக்கு வாய்ப்புக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தலைமைக்கு கட்டுப்பட்டு தலைமைச் சொல்லும் வேட்பாளா்களின் வெற்றிக்கு உழைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.