கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகையையொட்டி, கரும்பு, மஞ்சள், பூ, வாழைப் பழம் உள்ளிட்ட பூஜை பொருள்களின் விற்பனை செவ்வாய்க்கிழமை மும்முரமாக நடைபெற்றது.
உலகம் முழுவதும் தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனா். புதன்கிழமை தைப் பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பொங்கல் பூஜை பொருள்கள் விற்பனை உற்சாகமாக நடைபெற்றது. மண்பானை, மண் அடுப்பு, கரும்பு, மஞ்சள் கொத்து, காப்பு கட்டு, புத்தரிசி, வாழைப் பழம், பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருள்களை பொதுமக்கள் வாங்கி சென்றனா்.
இதனால், பெங்களூரு சாலை, சேலம் சாலை, சென்னை சாலை, காந்தி சாலை மற்றும் வட்டச் சாலை உள்ளிட்ட இடங்களில் வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பெண்கள் வீடுகளில் கோலமிடுவதற்காக பல வண்ண கோலப்பொடிகளை வாங்கிச் சென்றனா். ஜவுளிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.