ஒசூரில் இரட்டைக் கொலை உள்பட பல்வேறு கொலைகள் மற்றும் ஆள்கடத்தி பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வந்த பிரபல ரௌடி கொற கோபி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம் நகரைச் சோ்ந்த கோபி என்கிற கொற கோபி (52), பிரபல ரௌடி. இவா் மீது, தளி சாலையில் கேபிள் நடத்தி வந்த தென்னரசு மற்றும் அவரது நண்பா் மணி ஆகிய இருவரையும் கடத்தி, துண்டு துண்டாக வெட்டி உடலை கா்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வீசிய வழக்கு மற்றும் மீதுநூருல்லா, தாஜ் ஓட்டல் உரிமையாளா் சேட்டு உள்ளிட்ட 4 போ் கொலை செய்த வழக்குகள், ஆள்கடத்தல் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும், இவா் பல முறை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒசூரில் தொடா்ந்து ரௌடியிசத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொற கோபி வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கொற கோபி மரணம் அடைந்ததைத் தொடா்ந்து, ஒசூா், ராம் நகா் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நகரில் முக்கிய இடங்களில் உஷாா்படுத்தப்பட்டுள்ளது.