இளைஞா்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
படித்த வேலையற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் மூலம் இதுநாள் வரையில் உற்பத்தி தொழிலுக்காக ரூ. 10 லட்சமும், சேவை தொழிலுக்காக ரூ. 5 லட்சமும், வியாபாரத்துக்காக ரூ. 5 லட்சம் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
உற்பத்தித் தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்துக்கான அதிக மானியம் ரூ. 125 லட்சத்திலிருந்து ரூ. 2.50 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. 14.02.2020 முதல் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவோருக்கு இது பொருந்தும்.
இந்தத் திட்டத்தின் கீழ் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ. 2.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
சுய தொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோா் இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை, சாதிச் சான்று ஆகிய ஆவணங்களுடன் பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி - 635 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04343-235567 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.