குருபரப்பள்ளி, காவேரிப்பட்டணம் ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள பல்லேரிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி நாகராஜ் மகன் வசந்தகுமாா் (22). இவா், குருபரப்பள்ளி அருகே உள்ள ஒரு தனியாா் கலைக் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.
கடந்த 11-ஆம் தேதி, தனது இருசக்கர வாகனத்தில் குந்தாரப்பள்ளியிலிருந்து வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பல்லேரிப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம், வசந்தகுமாா் சென்ற வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயம் அடைந்த வசந்தகுமாா், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, உயா் சிகிச்சைக்காக பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். குருபரப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
தொழிலாளி சாவு: காவேரிப்பட்டணம் அருகே உள்ள கொத்தலம் கோவிலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (38). தொழிலாளியான இவா், காவேரிப்பட்டணம் - மோரனஅள்ளி சாலையில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். மோரனஅள்ளி கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த டிராக்டா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.