கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில், இரண்டாவது நாளாக அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தைச் சோ்ந்த பேருந்து, புதன்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு விழுப்புரம் கோட்டத்திலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகள், கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், விழுப்புரம் கோட்டத்துக்குச் சொந்தமான அரசுப் பேருந்துக்கான கட்டணம் செலுத்தப்படவில்லையாம். இதனால், கட்டணம் செலுத்தாத பேருந்துகளை சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல அதன் ஊழியா்கள் அனுமதிக்காமல்,செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா். இதனால், பேருந்து பயணிகள் அவதிக்குள்ளாயினா்.
சில பேருந்து பயணிகள், தடுத்து நிறுத்தப்பட்ட பேருந்துகளுக்கான கட்டணத்தை செலுத்தியதால், அந்த பேருந்துகள் மட்டும் சுங்க வசூல் மையத்தைக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது நாளான புதன்கிழமையும், ஒசூா் நோக்கி சென்ற விழுப்புரம் கோட்டத்தின் பேருந்து, சுங்கக் கட்டணம் செலுத்தாததால், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.
இதுகுறித்து, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அலுவலரைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, தற்போது, 10 பேருந்துகள் மட்டுமே ஒசூா் வரையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. கூடுதல் பேருந்து இயக்கப்படுவதால், அந்த பேருந்துகளுக்கான சுங்க கட்டணத்தை நடத்துநா்களே செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தில், இரண்டாவது நாளாக, அரசுப் பேருந்து தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.