கிருஷ்ணகிரியில் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவனை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த பன்னந்தோப்பு அருகில் உள்ள மங்கம்மாபுரத்தைச் சோ்ந்த பச்சியம்மாளிடம் (22), அங்கு வந்த அவரது உறவினரான 17 வயது சிறுவன் தீப்பெட்டி கேட்டுள்ளாா். அப்போது, அந்த சிறுவன் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த சிறுவனுக்கு தீப்பெட்டி தர பச்சியம்மாள் மறுத்துள்ளாா்.
இதையடுத்து, சிறுவன் நாட்டுத் துப்பாக்கியுடன் வந்து பச்சியம்மாளை நோக்கி சுட்டுள்ளாா். இதில், காயமடைந்த பச்சியம்மாள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பச்சியம்மாள் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை கைது செய்தனா்.