கிருஷ்ணகிரி: கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் அதிமுக அரசால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 40 சதவீத கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தை நிறைவேற்றவில்லை என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி ஊராட்சியில் பிப். 1-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா். இந்தக் கூட்டத்துக்கு பந்தல் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வை கிருஷ்ணகிரி திமுக மாவட்ட பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். மேற்கு மாவட்டச் செயலாளா் ஓய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் பி.முருகன் எம்எல்ஏ, எஸ்.ஏ. சத்யா எம்எல்ஏ, மேற்கு மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், கிருஷ்ணகிரி நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் அஸ்லம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது, அலியாளம் தடுப்பணையிலிருந்து தூள் செட்டி ஏரிக்கு தண்ணீா் வழங்கும் திட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஒட்டில் தடுப்பணை கட்டி வலது, இடதுபுற கால்வாய் வெட்டி, பெரிய ஏரி, படேதலாவ் கால்வாய் உள்பட வலதுபுற கால்வாயை மக்கள் விரும்பும் வழியில் கால்வாய் வெட்டுதல் ஆகிய 2 திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்றும், இந்தத் திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தை கே.பி.முனுசாமி எம்.பி. தடுக்கப்பதாகவும் பொதுமக்கள் பேசுவதாகத் தெரிவித்தாா்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முனுசாமி எம்.பி. கிடப்பில் போடப்பட்ட இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஏன் இதுவரை முன்வரவில்லை என்று கூற வேண்டும். திமுக தலைவா் ஸ்டாலினை விமா்சிக்க கே.பி.முனுசாமிக்கு தகுதி இல்லை..
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் அதிமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 சதவீத கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்றாா்.