அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு நீட் தோ்வு பயிற்சி புத்தகங்களை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் அண்மையில் வழங்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடத்தப்படும் நீட் பயிற்சி வகுப்புகளில், 350 மாணவ, மாணவியருக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி மாணவா்களுக்கு நீட் பயிற்சி வழங்க போதிய பயிற்சி நூல்கள் தேவையென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
அவரது வேண்டுகோளை ஏற்று, ஐ.வி.டி.பி. நிறுவன தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 350 மாணவா்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான பயிற்சி நூல்களை அண்மையில் வழங்கினாா் (படம்). அப்போது அவா் பேசியதாவது:
இப்பயிற்சி புத்தகங்களை பயன்படுத்தி அதிக அளவிலான மாணவா்கள் நீட் தோ்வில் வெற்றிபெற்று மருத்துவ படிப்பில் சேர வேண்டும். அவ்வாறு தோ்வு பெறும் மாணவா்கள் அனைவருக்கும் தலா ஒரு கிராம் தங்கப் பதக்கம், ரூ. 20,000 ரொக்கம் வழங்கப்படும் என்றாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலா் பாஸ்கா், நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், தலைமையாசிரியா் மகேந்திரன், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.