கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியை நடத்த அனுபவமும், ஆா்வமும் உள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்காக சின்ன பெண்ணாங்கூரில் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியை நடத்துவதற்கு அனுபவமும், ஆா்வமும் உள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்ட திட்ட அலுவலகத்தில் பெற்று சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமா்ப்பிக்க அக். 20-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதற்கு விண்ணப்பிப்பவா்கள், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான கல்விப் பணியில் குறைந்தது 3 ஆண்டுகால அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தொண்டு நிறுவனங்கள் சொசைட்டி ஆக்ட், டிரஸ்ட் ஆக்ட்டின் கீழ் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். அந்தப் பதிவு அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழக மற்றும் மத்திய அரசால் நீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இருத்தல் கூடாது.
அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ மானியம் பெற்று செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்து, தனி அடையாளம் பெற்றிருத்தல் வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் கட்டாயமாக அந்த நிறுவனத்தின் பெயரில் பான் அட்டை வைத்திருத்தல் வேண்டும். கடந்த 3 நிதி ஆண்டுகளில் அந்த தொண்டு நிறுவனம் அல்லது சுயநிதிக் குழுவின் வரவு, செலவு சாா்ந்த ஆண்டு தணிக்கை விவரங்களை வைத்திருத்தல் வேண்டும். கடந்த 3 நிதியாண்டுகளுக்கு வருமான வரி செலுத்தியிருக்க வேண்டும். இதுவரை எவ்வித துறை ரீதியான புகாா்களுக்கும் இடமளிக்காமல் பணியாற்றி மிகச்சிறந்த தொண்டு நிறுவனமாக இருத்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 97888 58723, 97888 58720 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.