கிணற்றில் தவறி விழுந்த 4 புள்ளிமான்கள் உயிருடன் மீட்பு
கிருஷ்ணகிரி அருகே நாய்கள் விரட்டியதால் 50 அடி வட கிணற்றில் தவறி விழுந்த 4 புள்ளிமான்களை வனத் துறையினா் உயிருடன் மீட்டு காப்புக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த தொகரப்பள்ளி வனப்பகுதியில் காட்டுப்பன்றி, எறும்புத்தின்னி, புள்ளிமான், மயில் போன்ற வன விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள், அவ்வப்போது, வனப் பகுதியிலிருந்து வெளியேறி கிராமங்களில் புகுவது வழக்கம்.
இந்த நிலையில் தொகரப்பள்ளி வனப் பகுதியிலிருந்து வெளியேறிய புள்ளிமான்கள் கூட்டம், சீனிவாசபுரம் அருகே சென்றன. அப்போது அவற்றை நாய்கள் துரத்தியதில், ராமசாமி என்பவருக்குச் சொந்தமான 50 அடி ஆழமுள்ள வட கிணற்றில் 4 புள்ளிமான்கள் தவறி விழுந்தன.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி வனச் சரக அலுவலா் மகேந்திரன் தலைமையில் வனத் துறையினா் புள்ளி மான்களை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள், பொதுமக்களின் உதவியுடன் உயிருடன் மீட்டனா். மீட்கப்பட்ட புள்ளிமான்களை வனத் துறையினா், அருகில் உள்ள வனப் பகுதியில் விடுவித்தனா்.