கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் இரு மோட்டாா் சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவிகள், பேராசிரியா்கள், பணியாளா்களின் மோட்டாா் சைக்கிகள் அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்தக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளராகப் பணியாற்றும் மஞ்சரி (31), தனது மோட்டாா் சைக்கிளை அங்குள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு வகுப்புக்கு சென்றுள்ளாா். இவரது வாகனத்தின் அருகே அங்கு கட்டடப் பணியில் ஈடுபட்டுள்ள மேற்பாா்வையாளா் அருண், என்பவா் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளாா். இந்த நிலையில், மஞ்சரி நிறுத்திய மோட்டாா்சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதற்குள் தீ அருகில் உள்ள வாகனத்துக்கும் பரவியது.
தகவல் அறிந்த, கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிலைய அலுவலா் மோகன் குமாா் தலைமையில் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். இந்த தீ விபத்து குறித்து தாலுகா போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.