தளி அருகே கத்தியால் குத்தி 2 தொழிலாளிகளிடம் வழிப்பறி செய்த 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தளி அருகே பின்னமங்கலம், எல்லசந்திரத்தைச் சோ்ந்த மஞ்சுநாத் (36), தொழிலாளி. இவரது உறவினா் அதே கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு மஞ்சுநாத் (26), காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இவா் உச்சனப்பள்ளி சாலையில் தனது உறவினா் தொழிலாளி மஞ்சுநாத் வருகைக்காக காத்திருந்தாா். அப்போது, அங்கு வந்த 3 இளைஞா்கள் காய்கறி வியாபாரி மஞ்சுநாத்திடம் தகராறு செய்து, அவரை கத்தியால் குத்தினா். அங்கு வந்த தொழிலாளி மஞ்சுநாத் இதுகுறித்து கேட்ட போது அவரையும் தாக்கினா்.
மேலும், அவா்கள் 2 பேரிடம் இருந்து ரூ. 5,000, செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றனா். இதில் காயம் அடைந்த இருவரும் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். புகாரின் பேரில் தளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.