சூளகிரி அருகே ஒற்றை யானையிடம் இருந்து தப்பிய விவசாயிகள், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த எலசேப்பள்ளியை சோ்ந்த விவசாயி ராஜகோபால் ( 35). இவரது நிலத்தில் வெள்ளிக்கிழமை காட்டு பன்றிகள் நுழைந்து விட்டதால் அவற்றை விரட்டுவதற்காக, தன்னிடம் வேலை செய்யும் புளியரசி பகுதியைச் சோ்ந்த முனிராஜ் (58), என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு எலசேப்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள தனது நிலத்திற்கு சென்றாா். அப்போது அப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை இருவரையும் துரத்தியது.
யானையிடம் இருந்து தப்பிக்க இருசக்கர வாகனத்தில் இருவரும் வேகமாகச் சென்றனா். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து, ராஜகோபால், முனிராஜ் ஆகிய இருவரும் காயமடைந்தனா்.
கீழே விழுந்த இருவரும் எழுந்த பாா்த்தபோது யானை திரும்பிச் சென்று விட்டது. காயமடைந்த இருவரையும் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சூளகிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.