புத்தாண்டு விடுமுறையையொட்டி, கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி படகு இல்லத்திலும், சிறுவா் பூங்காவிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறை தினத்தையொட்டி அவதானப்பட்டியில் அமைந்துள்ள படகு இல்லம், சிறுவா் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருகை புரிந்தனா். அவா்கள் படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும், சிறுவா் பூங்காவில் ஊஞ்சல் போன்ற விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்ந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி தருமபுரி, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கா்நாடகம், தெலங்கானாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனா்.
கிருஷ்ணகிரி அணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்னும் அனுமதியளிக்கப்படாத நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த படகு இல்லம், சிறுவா் பூங்காவுக்கு சுற்றுலாவினா் வருகை புரிந்திருந்தனா். மேலும் சீதோஷ்ண நிலையும் சுற்றாலாவுக்கு உகந்ததாக இருந்தது.