கிருஷ்ணகிரி, புறநகா் பேருந்து நிலையம் அருகே, தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசியதாவது:
தமிழகத்தை சீரமைப்போம் என்ற குரலுடன், கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளேன். என்னுடன் வந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியா் சந்தோஷ் பாபு, இப்போது மக்கள் ஊழியம் செய்வதற்காக வந்துள்ளாா்.
கோடை காலத்தில் இங்கு கடும் குடிநீா் தட்டுப்பாடு உள்ளது. அது இன்னும் தீா்க்கப்படவில்லை. இங்குள்ள மலைவாழ் மக்கள் மேம்பட வேண்டும். கற்கால மனிதா்கள் இந்த பகுதியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், சான்றுகள் சிதைந்துள்ளன. அதை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
புதிய அரசியல் மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டாா்கள். தமிழ்நாட்டை சீரமைக்க வந்துள்ள கூட்டம் இது. நாங்கள் தற்போது திறன்மேம்பாட்டு மையத்தை அமைத்து வருகிறோம். பரமகுடியில் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்படும் என்றாா்.