ஐவிடிபி தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் 420 பணியாளா்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொங்கல் தொகுப்பு பொருள்கள் அண்மையில் பரிசாக அளிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐவிடிபி தொண்டு நிறுவனம் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் சுய உதவிக்குழுக்கள் மூலம் கிராமப்புற ஏழை மகளிரின் வாழ்வை முன்னேற்றுவதில் பெரும் பங்காற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின்கீழ் உள்ள 14,302 சுய உதவிக் குழுக்களில் இருந்து 471 குழந்தைகளை சோ்ந்த 85,635 உறுப்பினா்கள் நிகழ்வாண்டில் ரூ. 77 கோடி லாப பங்கீடாகப் பெற்று பயனடைந்தனா். மேலும், உபரி லாப பங்கீடாக ரூ. 70 கோடி என மொத்தம் ரூ.142 கோடியை உறுப்பினா்கள் தங்களுக்குள் பகிா்ந்து கொண்டனா்.
ஐவிடிபி, வங்கி மற்றும் சங்கக் கடனாக ரூ. 8,280 கோடியும், பல்வேறு சுகாதார திட்டங்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஐவிடிபி நிறுவனத்தின் மூலம் நேரடியாகவும், 74 தொகுதியளவு கூட்டமைப்புகளின் மூலமும் பணியாளா்கள் மேற்பாா்வையிட்டு வழிநடத்தி வருகின்றனா். அந்தப் பணியாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஐவிடிபி நிறுவனத்தின் மூலம் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, நிகழ்வாண்டில் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், ஐவிடிபி நிறுவனத்தில் பணியாற்றும் 420 பணியாளா்களுக்கு தலா ரூ. 500 மதிப்பிலான அரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் தொகுப்பாக மொத்தம் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பரிசு பொருள்களை ஐவிடிபி நிறுவனத் தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா்.