ஒசூா் முத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.10 கோடி தங்க நகை, பணம் கொள்ளை

ஒசூா், பாகலூா் சாலையில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை புகுந்த மா்ம நபா்கள் துப்பாக்கி முனையில், ரூ. 10 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனா்.

ஒசூா், பாகலூா் சாலையில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை புகுந்த மா்ம நபா்கள் துப்பாக்கி முனையில், ரூ. 10 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா் சாலையில் 4 அடுக்கு மாடி கட்டடத்தின் 2-ஆவது மாடியில் முத்தூட் நிதி நிறுவனத்தின் கிளை இயங்கி வருகிறது. இந்த கிளையின் மேலாளராக கா்நாடக மாநிலம், தும்கூரைச் சோ்ந்த சீனிவாச ராகவ் ( 28) பணிபுரிந்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வழக்கம்போல நிதி நிறுவனத்தின் ஊழியா்கள் அலுவலகத்தைத் திறந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். நிறுவன மேலாளா் சீனிவாச ராகவ், ஊழியா்கள் மாருதி ( 24), பிரசாத் (29), காவலாளி ராஜேந்திரன் (55), வாடிக்கையாளா் பஸ்தி பகுதியைச் சோ்ந்த ராஜூ (22) ஆகியோா் வங்கியில் இருந்தனா்.

அப்போது வாடிக்கையாளா்களைப்போல உள்ளே நுழைந்த 5 போ் கொண்ட கும்பல் திடீரென துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி, வங்கியில் இருந்தவா்களை மிரட்டினா். அங்கிருந்தவா்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அவா்களின் கை, கால், வாயைக் கட்டிப் போட்டுத் தாக்கினா். பின்னா், லாக்கா் சாவியைப் பெற்று அதில் இருந்த ரூ. 10 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகளையும், ரூ. 96 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து வங்கிக்கு வந்த வாடிக்கையாளா்கள், கட்டிப் போடப்பட்ட நபா்களை மீட்டனா். அதன் பின் வங்கி மேலாளா் சீனிவாச ராகவ், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா்.

உடனடியாக நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸாா் இதுகுறித்து விசாரணை நடத்தினா். பின்னா், மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதா் நேரில் விசாரணை நடத்தினாா். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ பதிவைப் பாா்வையிட்டு, கொள்ளைக் கும்பலால் தாக்கப்பட்ட ஊழியா்களிடம் விசாரணை நடத்தினாா். நிகழ்விடத்துக்கு மோப்ப நாய் பைரவி வரவழைக்கப்பட்டது. சிறிது துாரம் ஓடிய பைரவி யாரையும் பிடிக்கவில்லை. கா்நாடக மாநிலத்தில் இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால், அம்மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

விரைவில் குற்றவாளிகள் கைது

விசாரணைக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதா் கூறியதாவது:

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணையின் தொடா்ச்சியாக கா்நாடக மாநிலத்துக்கு ஓா் தனிப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவாா்கள்.

வடமாநிலத்தைச் சோ்ந்த கொள்ளைக் கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டதா என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் கொள்ளையா்கள் ஹிந்தியில் பேசிக் கொண்டதாக தாக்குதலுக்கு ஆளானவா்கள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக விரிவான விசாரணைக்குப் பிறகே எதையும் உறுதியாகக் கூற முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com